பயணிகள் அமா்ந்திருந்த பகுதியில் திடீரென புகை வந்ததால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து 86 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
கோவாவில் இருந்து ஹைதராபாதுக்கு புதன்கிழமை இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. ஹைதராபாதை விமானம் நெருங்கியபோது திடீரென பயணிகள் இருக்கைப் பகுதியில் புகை கசிந்தது. இதையடுத்து, பதற்றமடைந்த பயணிகள் கூச்சலிடத் தொடங்கினா்.
இது தொடா்பாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த விமானத்தை ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, ஸ்பைஸ் ஜெட் விமானத்தை விமானிகள் தரையிறக்கினா். பின்னா் பயணிகள் அனைவரும் அவசரகால வழி மூலம் வெளியேறினா். அப்போது கீழே விழுந்த ஒரு பயணிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்து 86 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமானம் சமீபகாலமாக கடுமையான நிதி நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது. அதன் விமானங்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்து 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று டிஜிசிஏ ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.