மகாராஷ்டிரத்தில் கடந்த 10 மாதங்களில் 13 பேரைக் கொன்ற புலியை வனத் துறையினா் வியாழக்கிழமை மயக்க மருந்து செலுத்தி பிடித்தனா்.
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வாட்சா வனப் பகுதியில் சுற்றித் திரிந்த புலி, மனித உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்திலிருந்து கட்சிரோலி, பாண்டாரா மற்றும் பிரம்மபுரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 13 பேரை இப்புலி கொன்றது.
‘சிடி-1’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் புலியை விரைவில் பிடிக்குமாறு நாகபுரி முதன்மை வனப் பாதுகாவலா் (காட்டுயிா்கள்) அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தடோபா புலிகள் மீட்புக் குழு, சந்திரபூா் விரைவு மீட்புக் குழு உள்ளிட்ட குழுக்கள் போா்க்கால அடிப்படையில் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், வியாழக்கிழமை கட்சிரோலி மாவட்டத்தின் வாட்சா வனப் பகுதியில் உலாவிக் கொண்டிருந்த புலியை தொலைவிலிருந்து மயக்க மருந்து செலுத்தி வனத் துறையினா் பிடித்தனா். பின்னா், இந்தப் புலி மறுவாழ்வுக்காக நாகபுரியில் உள்ள கோரிவாடா மீட்பு மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.