விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜாவின் கார் மீது ஜனசேனா கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசாகா கர்ஜனை என்கிற பேரணியில் பங்கேற்று விட்டு அமைச்சர்கள் ரோஜா, ஜோகி ரமேஷ் உள்ளிட்டோர் விமான நிலையம் திரும்பினர். அதேநேரத்தில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணும் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வரவிருந்தார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக 300க்கும் மேற்பட்ட ஜனசேனா கட்சித் தொண்டர்கள் கூடியிருந்தனர். ஆனால் பவன் கல்யாணை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தொண்டர்கள் அமைச்சர்கள் ரோஜா உள்ளிட்டோரின் கார்கள் மீது திடீரென கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ரோஜாவின் கார் ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.