புது தில்லி: தக் தக் கேங் என்று தில்லி காவல்துறையினரால் குறிப்பிடப்படும் நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கார் கதவை இரண்டு முறை தட்டி, ஓட்டுநர்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது தீனதயாளன் (24), ராஜூ (54), கருப்பசாமி (37), மூர்த்தி (24) ஆகியோர் தில்லியில் உள்ள ஷகுர்புர் பகுதியில் வசித்து வருவரும், அவர்களது பூர்வீகம் தமிழகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், புது தில்லியில் இதுவரை பதிவான வாகனக் கொள்ளை தொடர்பான நான்கு வழக்குகள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நான்கு பேரில் தீனதயாளன் தமிழ் திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் என்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இவர்களைக் கைது செய்த தனிப்படையினர், கொள்ளைச் சம்பவம் நடந்த ஒவ்வொரு பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கியிருக்கிறது.
இவர்களிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தெரிய வரலாம் என்றும் காவல்துறையினர் கருதுகிறார்கள்.
கொள்ளையடிப்பதில் புதிய முறையை இவர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் ஓடும் காருக்கு அருகே சென்று கண்ணாடியை இரண்டு முறை தட்டிவிட்டு மறைந்துவிடுவார்கள். காருக்கு என்ன நடந்ததோ என்ற பதற்றத்தில் கார் ஓட்டுநர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்கும் அந்த நொடிக்குள், இந்த கும்பலைச் சேர்ந்த சிலர் காருக்குள் இருக்கும் பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு மறைந்து விடுவார்கள் என்று காவலர்கள் கூறியுள்ளனர்.