ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் பிகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவின் ஜாமீனுக்கு தடை விதிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஐஆர்சிடிசி உணவகங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மனைவி ரப்ரிதேவி உள்பட 12 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 2018ல் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகளை மீறி தேஜஸ்வி செயல்பட்டு வருவதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், ஜாமீன் மீதான சிபிஐ விதிமுறைகளை, தான் மீறவில்லை என்று தேஜஸ்வி கூறினார்.
தேஜஸ்வி தரப்பு கோரிக்கையை ஏற்று அவரின் ஜாமீனுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்?