சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
36 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், தீபாவளி பண்டிகையை இஸ்ரோ தொடங்கிவிட்டது. செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 20 செயற்கைக்கோள்கள் எஞ்சியுள்ளன. இதன் தகவல்கள் சற்று தாமதமாக பெறப்படும். கண்காணிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
சந்திராயன் -3 பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இறுதி ஒருங்கிணைப்பும் தேர்வும் நடைபெற்று முடிந்தது. மேலும், ஒரு சில சோதனைகளே எஞ்சியுள்ளன. சந்திராயன் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு பிப்ரவரி, ஜுன் என இரண்டு கால இடைவெளி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜுன் மாதத்தில் சந்திராயன் -3 விண்ணுக்கு செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.