அதிக வேதிப்பொருள்கள் கலந்திருப்பதால், மிகப் பிரபலமான டவ் உள்ளிட்ட உலர் ரக ஷாம்புகளை திரும்பப் பெற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் டவ், டிரஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட உலர்ரக ஷாம்புகளில் அதிக வேதிப் பொருள் கலந்திருப்பதாகவும், அதனைப் பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
எனவே, அக்டோபர் 2021ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்ட டவ், நெக்ஸஸ், டிரெஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட சந்தைப் பெயர்களைக் கொண்ட உலர் ரக ஷாம்புகளை, சந்தையிலிருந்து யூனிலிவர் நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, உலகம் முழுவதும் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜான்ஸன் ஜான்ஸன் நிறுவனத் தயாரிப்புப் பொருள்கள் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மிகப் பிரபலமான, அதிகம் விற்பனையாகும் ஷாம்புகளைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகக் கூறி சந்தையிலிருந்து அந்தப் பொருள்கள் திரும்பப்பெறப்படுவது வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேநேரம், தயாரிப்பு நிறுவனமே திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கும் இந்த வகை ஷாம்புகள் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வர்த்தக இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனம், உலர் ரக ஷாம்புகளை மட்டுமே திரும்பப் பெறுவதாகவும் சாதாரண வகை ஷாம்புகள் அல்ல என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.