அடுத்த ஆண்டு சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அனைத்திந்திய காங்கிரஸ் குழு பொறுப்பாளர் பி.எல்.புனியா தலைமை தாங்கினார். மேலும், இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், மாநில அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு பி.எல்.புனியா பேசியதாவது: இது அரசியல் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை ஆலோசிக்கும் கூட்டமாக அமைந்தது. இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன என்றார்.
இதையும் படிக்க: ஜிம்பாப்வே வீரரை ஊக்கப்படுத்தி விருது பெற வைத்த ரிக்கி பாண்டிங்!
இது குறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக காங்கிரஸின் தலைவராக பல ஆண்டுகளாக உழைத்த சோனியா காந்தி அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளது என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸினை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.