வடக்கு சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த 74 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.
யும்தாங் பள்ளத்தாக்கிலிருந்து 19 கி.மீ தொலைவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்துவருவதாக மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். நிலச்சரிவில் 8 சுற்றுலா வாகனங்கள் சிக்கியிருந்தது. அதைத் தொடர்ந்து மரப்பலகைகள் மற்றும் கயிறுகளால் ஒரு நடைபாதை உருவாக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை மீட்க மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது.
நிலச்சரிவில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன.
பள்ளத்தாக்கில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 74 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.