ஜாா்க்கண்டில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த தனது வீட்டு பணிப்பெண்ணை கடும் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் தலைவரான சீமா பத்ரா புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சுனிதா என்ற அந்த பணிப்பெண் (29), சீமா பத்ராவின் ராஞ்சி வீட்டிலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டாா். அவா் தனது வாக்குமூலத்தை நீதிபதி முன் பதிவு செய்திருந்தாா். பல ஆண்டுகளாக வீட்டில் அடைத்துவைத்து, தன்னை கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாக சீமா பத்ரா மீது அப்பெண் குற்றம்சாட்டினாா். இதையடுத்து, சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்தன.
ராஞ்சியில் உள்ள ‘ரிம்ஸ்’ மருத்துவமனையில் சுனிதா சிகிச்சை பெற்று வருகிறாா்.
முன்னதாக, தனக்கு நோ்ந்த கொடுமைகளை சுனிதா விவரிக்கும் விடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சீமாவை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ், சீமா பத்ரா மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மாநில டிஜிபி நீரஜ் சின்ஹாவுக்கு கேள்வி எழுப்பியிருந்தாா்.
சீமாவின் கணவா் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.