ராஜஸ்தானில் தலித் மாணவிகள் மதிய உணவு வழங்கியதால் சமையலர் அதை தூக்கி எறியும்படி பிற மாணவர்களுக்கு கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் பரோடி பகுதியில் லாலா ராம் குர்ஜார் எனும் சமையலர் அரசு உயர்நிலை பள்ளியில் வேலை புரிந்து வந்துள்ளார். அங்கு அவர் சமைத்த மதிய உணவினை உயர்சாதியினை சேர்ந்த மாணவிகள் பரிமாறுவது வழக்கம். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு தலித் மாணவிகள் பரிமாறியுள்ளனர். உயர்சாதியினை சேர்ந்த மாணவிகள் சரியாக பரிமாறுவதில்லை என்பதால் ஆசிரியர் இவர்களை பரிமாற கூறியிருக்கிறார். அவ்வாறு பரிமாறும் போது பிற மாணவர் மாணவிகளை உணவினை வீசி எறியும்படி சமையலர் லாலா ராம் கூறியுள்ளார். சக மாணவர்களும் அப்படியே செய்துள்ளனர்.
இதனை மாணவிகள் தங்களது வீட்டில் கூறியுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் காவல்துறை இதனை விசாரித்ததில் நடந்தவை உண்மையென தெரிய வந்துள்ளது. அதனால் சமையலரை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.