புதுதில்லி:பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையேயான பேச்சுவார்த்தை இன்று தில்லியில் தொடங்கியது. 4 நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்..
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி மற்றும் ஷேக் ஹசீனா முன்னிலையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஆசியாவிலேயே வங்கதேசம் தயாரிப்புகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. உலகளாவிய தொற்று இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த நிதி ஆண்டில் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது என்று இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த சவாலான காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்து குறித்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை மேலாண்மை மற்றும் எல்லைத் தாண்டிய குற்றங்கள் ஆகிய துறைகளில் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்வதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
வங்கதேசம் இந்தியாவின் முக்கியமான வளர்ச்சிக்கு உதவும் நாடுகளில் ஒன்றாகும் என்றார் இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா.