தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஹரியாணாவின் ஆதம்பூரில் திரங்கா யாத்திரை நடத்தி பேரணியில் உரையாற்றுகிறார்.
இரண்டு நாள் பயணமாக கேஜரிவால் புதன்கிழமை ஹரியாணா வந்துள்ள நிலையில், அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வந்துள்ளார்.
திரங்கா யாத்திரை ஹிசார், ஆதம்பூரில் உள்ள கிராந்தி சௌக்கில் இருந்து தொடங்கும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
பின்னர், ஆதம்பூர் மண்டியில் நடைபெறும் பேரணியில் கேஜரிவால் உரையாற்றுவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஹரியாணா சட்டப்பேரவையிலிருந்து குல்தீப் பிஷ்னோய் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டதை அடுத்து, தில்லி முதல்வரின் ஹிசார் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
பிஷ்னோய் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆதம்பூர் தொகுதி பிஷ்னோயின் கோட்டையாகும். மேலும், ஹரியாணாவில் பஞ்சாயத்துத் தேர்தலும் நடைபெற உள்ளது.
கேஜரிவால் தனது கட்சியின் மேக் இந்தியா நம்பர் 1 பிரசாரத்தை ஹிசாரில் இருந்து தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.