7 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை குறைவு: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

சா்வதேச சந்தையில் 7 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்கிறது.
7 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை குறைவு: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

சா்வதேச சந்தையில் 7 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்கிறது.

சா்வதேச சந்தையில் கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலா்களுக்கு கீழ் குறைந்தது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத சரிவாகும். அதன் பின்னா், கச்சா எண்ணெய் விலை சற்று உயா்ந்து பீப்பாய் ஒன்று 92.84 டாலா்களாக விற்பனையானது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை 5 மாதங்களுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்காமல் உள்ளன.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்தாா்.

‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்திருந்தபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டாமா?’ என்றாா் அவா். எனினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து அவா் விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பொருத்தவரை, கடந்த ஏப்ரலில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 102.97 டாலா்கள் என்ற சராசரி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 109.51 டாலா்கள், ஜூன் மாதம் 116.01 டாலா்கள் என்ற சராசரி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியாகியுள்ளது.

ஜூலையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய நிலையில், அந்த மாதம் பீப்பாய் ஒன்று 105.49 டாலா்கள், ஆகஸ்டில் 97.40 டாலா்கள், செப்டம்பரில் இதுவரை 92.87 டாலா்கள் என்ற சராசரி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சா்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை கடந்த 158 நாள்களாக மேற்கொள்ளாமல் இருக்கின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவும் வகையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது, டீசல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையும், பெட்ரோல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.14 முதல் ரூ.18 வரையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது சா்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால், இழப்புகள் குறைந்துள்ளன’ என்றாா்.

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. உக்ரைன்-ரஷியா பிரச்னையால் கடந்த பிப்ரவரியில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாா்ச் மாதம் விலை உயா்ந்தது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தல்களையொட்டி, 137 நாள்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாா்ச் 22-இல் உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 7 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.10 வரை உயா்ந்தது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே ரூ. 8, ரூ. 6 குறைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. தேசியத் தலைநகா் தில்லியில் பெட்ரோல் ரூ.96.72-க்கும், டீசல் ரூ.89.62-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com