புது தில்லி: இந்தியாவில் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
19வது இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய நிதின் கட்கரி, நாம் இருவரும் இயற்கையாக அமைந்த கூட்டாளிகள். வளர்ச்சிக்காக பரஸ்பரம் பல்வேறு உதவிகளை செய்து கொண்டுள்ளோம். இரு நாடுகளுமே சமூக, பொருளாதார, கொள்கைகளில், தத்தமது நம்பிக்கை, மரியாதை, கூட்டாண்மை உள்ளிட்டவற்றை எப்போதும் வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த ஆண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய கொள்கைகளை உருவாக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் 70 சதவீத சரக்குப் போக்குவரத்து மற்றும் 90 சதவீத மக்கள் போக்குவரத்து சாலைவழியாகவே நடக்கிறது. எனவே, இந்தியாவின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.