எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
19வது இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய நிதின் கட்கரி பேசுகையில்,
“மத்திய போக்குவரத்துத் துறை ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்வதற்காக ‘தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்' பொருத்தப்படவுள்ளது.
இதன்மூலம், கட்டணச் சாலைகளில் வாகனத்தில் செல்பவர்கள், அவர்கள் செல்லும் தூரத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கணக்கிடப்பட்டு, உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணம் எடுத்துக் கொள்ளப்படும். இதன்மூலம், சுங்கச் சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
கடந்த 2018-2019ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு சுங்கசாவடியை கடந்து செல்ல 8 நிமிடங்கள் ஆனது. ஆனால், ஃபாஸ்ட் டேக் திட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் நேரமானது 47 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இதுவரை முடிவெடுக்கவில்லை என்றாலும், இந்த புதிய திட்டம் அறிமுகமானால், எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இருக்காது” எனத் தெரிவித்தார்.