மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பான சுழல் நிலவுகிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர்.
பிற இடங்களில் இருந்து முற்றுகை போராட்டத்திற்காக ரயில்கள், பேருந்துகள் மூலமாக கொல்கத்தா நோக்கி நேற்று முதலே பாஜகவினர் புறப்பட்டனர்.
இதனால், கொல்கத்தாவில் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்து பாஜக தொண்டர்களை கைது செய்து வருகின்றனர். சட்டப்பேரவைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று பகல் பேரணியாக வந்த பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி, ராகுல் சின்ஹா, லாக்கெட் சாட்டர்ஜீ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் திடீரென்று தீ வைத்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.