ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலையில் தொடர்ந்து மர்மம் நிலவி வரும் நிலையில், அரசியல் பின்னணி இருப்பதாக அவரது சகோதரி ருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ருகேஷ்,
சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் உண்மை வெளிவரும். கோவா போலீசாரின் விசாரணை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. கோவா போலீசார் சொத்துக் கோணத்தில் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
கொலைக்குப் பின்னால் சில பெரிய நபர்கள் இருக்கலாம். சோனாலி அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம், எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அரசு அழுத்தம் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
சோனாலி போகாட்டின் சந்தேக மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான சோனாலி போகாட் கடந்த மாதம் கோவாவில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.