காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பாஜக எம்எல்ஏ பிரதீப் சௌதரியின் தாயை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், தங்கக் கம்மலுக்காக காதையே வெட்டிச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.
பிரதாப் விஹார் பகுதியில் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற 70 வயது மூதாட்டியை, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கம்மலைக் கழட்டி தருமாறுக் கேட்டுள்ளனர். ஆனால் கம்மலை கழட்ட முடியாததால், கையில் இருந்த கத்தியை எடுத்து காதோடு அறுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து சம்பவம் நடந்த வெள்ளியன்றே குடும்பத்தினர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தும், ஞாயிற்றுக்கிழமை தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலந்த்ஷஹரின் சாதர் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரதீப் சௌதரியின் தாய் சந்தோஷ் தேவி. இவர் தனது இளைய மகன் ஜீத்பால் சௌதரியுடன் பிரதாப் விஹார் பகுதியில் வசித்து வருகிறார்.
இது குறித்து ஜீத்பால் கூறுகையில், செப்டம்பர் 9ஆம் தேதி காலை நடைப்பயிற்சி சென்ற தனது தாயை, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கம்மலைக் கழட்டித் தருமாறு கூறியுள்ளனர். அதனை கழட்ட முடியாமல் போனதால், கத்தியை எடுத்து காதோடு அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் தவித்த எனது தாயாரைப் பார்த்த காவலர்கள், அவருக்கு முதலுதவி செய்யவோ குற்றவாளிகளைத் தேடவோ முயலாமல், இனி காலை நடைப்பயிற்சி வரக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.