முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம் திவாலாகி வருவதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு ஊழலில் திளைப்பதாக குற்றம்சாட்டி, கொல்கத்தா மற்றும் ஹெளராவின் பல இடங்களில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
காவல் துறையின் அனுமதியை மீறி பேரணி நடந்ததால், காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முடிவில் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர். பாஜக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி நேற்று நடத்திய பேரணி கலவரமாக முடிந்தது. மேற்கு வங்கம் கலாசார பாரம்பரியம் மற்றும் அறிவார்ந்த மக்களைக் கொண்டது. ஆனால் தற்போது மம்தா பானர்ஜி ஆட்சியின் கீழ் மேற்கு வங்கம் சட்டவிரோத மாநிலமாகவும், திவால் மாநிலமாகவும் மாறி வருகிறது.
மம்தா பானர்ஜி ஜனநாயக உரிமையைக் காப்பது குறித்து மாநிலத்திற்கு வெளியே பேசிவருகிறார். ஆனால் மாநிலத்திற்குள் ஜனநாயக உரிமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டார்.