திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நான்கு நகரங்களில் 5 ஜி சேவை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி பண்டிகை முதல் 5 ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
அம்பானியுடன் அவரது வருங்கால மருமகள் ராதிகாவும் உடன் வந்திருந்தார். தரிசனத்தின்போது, ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.5 கோடியை நன்கொடையாக முகேஷ் அம்பானி வழங்கினார் என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலிலுக்கு குடும்பத்துடன் சென்று முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.