மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்துவதாக நம்பவில்லை, சில பாஜக தலைவர்கள்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்புகளின் 'அதிகப்படியான' நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்குவங்க அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
தீர்மானத்தின் மீது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி, மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. பாஜக தலைவர்கள்தான் சிலர், தங்களது விருப்பு, வெறுப்புகளுக்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை அவ்வாறு பயன்படுத்துகின்றனர்.
மத்திய அரசு மற்றும் பாஜக ஆகிய இரண்டின் கொள்கைகளும் தனித்தனியே இருப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். இரண்டும் இணைந்து செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தற்போதைய மத்திய அரசு ஒரு சர்வாதிகார வழியில் நடக்கிறது. இந்த தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மத்திய புலனாய்வு அமைப்புகளின் ஒரு சார்பு செயல்பாட்டிற்கு எதிரானது' என்றார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு 189 எம்எல்ஏக்கள் ஆதரவாகவும், 69 பேர் (பெரும்பாலானோர் பாஜக எம்எல்ஏக்கள்) எதிராகவும் வாக்களித்துள்ளனர்.