இண்டிகோ விமானத்தில் ஹிந்தி தெரியாததால் தெலுங்கு மொழி மட்டுமே தெரிந்த பெண் ஒருவர் வேறு இருக்கைக்கு மாற கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதற்கு தெலங்கானா அமைச்சர் கே.டி.ரமா ராவ் கண்டனம் தெரிவித்து, உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், அவசர வெளியேற்றம் அருகேவுள்ள இருக்கையில் பெண் பயணி அமர்ந்துள்ளார்.
தெலுங்கு மட்டுமே தெரிந்திருந்த அவர், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரியாததால், அவசர இருக்கை அருகேயிருந்து வேறு இருக்கையில் அமர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதனை உடன் பயணித்த சக பயணி சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், இண்டிகோ நிறுவனம் உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். உள்ளூர் பயணிகளுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. பிராந்திய வழிகளில் விமானங்களை இயக்கும்போது தமிழ், உள்ளூர் மொழிகளை அறிந்த பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். இதுவே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.