பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை தில்லி திரும்பினார்.
பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த 8 ஆம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | எங்கும் எதிலும் மகாராணி எலிசபெத்!
இறுதிச் சடங்கிற்காக மகாராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸடரிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டா் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னா், விண்ட்ஸருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரின் கணவா் இளவரசா் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றிருந்தார். அவருடன் வெளியுறவுத் துறை செயலாளர் வினய் குவத்ராவும் சென்றார்.
இறுதிச் சடங்கில் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் ராணியின் மகன் இளவரசர் சார்லஸுக்கு ஆறுதல் தெரிவித்தார். இரங்கல் குறிப்பிலும் இந்தியா சார்பில் திரெளபதி முர்மு கையெழுத்திட்டார்.
இந்நிலையில் இன்று காலை அவர் தில்லி திரும்பினார்.