பெங்களூரு: பெங்களூருவின் வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் அசென்டியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் உரிமையாளர்கள் தங்களது குடியிருப்பின் கட்டுமான நிறுவனம் மீது மர்த்தஹல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செப்டம்பர் முதல் வாரத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக முதல் தளங்கள் தண்ணீரில் மூழ்கியதும், தங்களது விலைஉயர்ந்த கார்கள் தண்ணீர் மூழ்கி வீணானது, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்காதது என பல குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சுமார் 172 குடியிருப்புகள் அடங்கிய இந்த கட்டடத்தின் கீழ் பகுதியல் நிறுத்தப்பட்டிருந்த 29 கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இது மட்டுமல்ல, இந்தக் குடியிருப்புக்கு அருகே புதிதாக இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதால் பகல் நேரத்தில் கடுமையான இரைச்சல் கேட்கிறது. இது அதிகபட்ச ஒலி அளவை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
குடிநீர் முதல், அனைத்துத் தேவைகளுக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து இழப்புகளுக்கும் கட்டட கட்டுமான நிறுவனமே காரணம். அதுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குடியிருப்புகளில் வாழ்வோர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.