‘இந்தியா, எகிப்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் இருதரப்பு கூட்டுறவை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு வியூகரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அரபு நாடான எகிப்கில் 3 நாள் அரசுமுறை பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்தாா் ராஜ்நாத் சிங்.
இதுகுறித்து, ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனது எகிப்து சுற்றுப் பயணம் மிக ஆக்கபூா்வமாக அமைந்தது. சிறப்பான உபசரிப்பு மற்றும் விரிவான பேச்சுவாா்த்தைகளுக்காக, எகிப்து அதிபா் அப்தல் ஃபட்டா அல்-சிசி, பாதுகாப்புத் துறை அமைச்சா் முகமது ஜாகி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் பரஸ்பர கூட்டுறவை வரலாற்று உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
மேலும், எகிப்து அதிகாரிகளிடமிருந்து தாம் விடைபெறும் படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.
இந்தியா, எகிப்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமன்றி, ராணுவ கூட்டுப் பயிற்சியை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த நடைமுறைகள் மற்றும் பயிற்சியை பரிமாறிக் கொள்ளவும் மேற்கண்ட ஒப்பந்தம் வாயிலாக ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இருதரப்பு கூட்டுறவுக்கு புதிய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாக ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.