விரைவில் நிதீஷ் குமாருடன் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டதிலிருந்து நாடு முழுவதும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் தொடர்பாக பேச்சுகள் தீவிரமடைந்து வருகின்றன.
இதையும் படிக்க | 'விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளது தமிழ்நாடு'
பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு, மூன்றாவது அணி உள்ளிட்ட செய்திகள் வெளியாகிவரும் நிலையில் நிதீஷ் குமாருடன் இணைந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாக லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “2024 தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்குவோம். ராகுல் காந்தி தனது யாத்திரையை முடித்த பிறகு நிதீஷ் குமாருடன் தில்லி சென்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | சோனியா காந்தியுடன் அசோக் கெலாட் சந்திப்பு!
நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் பரவி வரும் நிலையில் சோனியா காந்தியுடனான சந்திப்பை லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது