பெரும் நிறுவனங்களின் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பான விசாரணையில், எந்தவித குற்றங்களையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், 14 வழக்கு விசாரணைகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விவரங்கள் தொடர்பாக முக்கியமான அரசியல் பிரமுகர்களுடன் பெரு நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா தொலைபேசியில் பேசிய உரையாடல்களின் பதிவுநாடா வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க.. 'பே சிஎம்' போஸ்டர்கள்: கர்நாடக முதல்வருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம்
நீரா ராடியா உரையாடல் தொடர்பாக வருமான வரித்துறை 14 வழக்குகளைப் பதிவு செய்திருந்தது. இந்த உரையாடலை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த சிபிஐ, இன்று சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதாவது, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், சுமார் 8,000 தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்த பிறகு, நீரா ராடியான மீதான 14 வழக்குகளில் முதற்கட்ட விசாரணையை கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
மேலும், நீரா ராடியா உரையாடல் தொடர்பாக அனைத்துப் பதிவுகளையும் ஆராய்ந்ததில், அதில் எந்த விதமான குற்ற நடவடிக்கைகளும் நடந்ததற்கான பேச்சுகள் இடம்பெறவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொழிலதிபர்கள் சார்பில் பெரும் நிறுவனங்களின் தரகராக நீரா ராடியா செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, நீரா ராடியா உரையாடலால் 12 ஆணடுகளாக அரசியல்வாதிகள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் விமரிசனத்துக்கு உள்ளானார்கள்.