ஜம்மு கிராம மாணவர்கள் அதிகம் விரும்பும் இக்னோ பல்கலை!
ஜம்முவில் தொலைதூர கிராமங்களுக்குக் கல்வியை வழங்குவதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்(இக்னோ) முக்கிய பங்கு வகிக்கிறது.
பட்டப் படிப்புக் கல்லூரிகளில் முறையான கல்வியைத் தொடர நிதி இல்லாத மாணவர்கள், உயர்கல்விக்கான தங்கள் கனவை நனவாக்க இக்னோ பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து இக்னோ பிராந்திய இயக்குனர் டாக்டர் சந்தீப் கூறுகையில்,
தரமான கல்வி, பாடத்திட்டம் வழங்கி வருவதால் மாணவர்களிடையே நம்பகத் தன்மையும், நம்பிக்கையையும் பெற முடிந்தது. 2021-22ல் மட்டும் ஜம்மு கிராமப்புறங்களைச் சேர்ந்த 77 சதவீத மாணவர்கள் பல்வேறு பாடத் திட்டத்தின் கீழ் இக்னோவில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளிலும் இக்னோ பல்கலை பிரபலமடைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக தரமான கல்வியை வழங்குவதிலும், சமூகத்தின் நலிந்த பிரிவினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் முன்னணி வகித்து வருகிறது இக்னோ பல்கலை.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு பாடத்திட்டங்களில் சேர்க்கைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் பல்வேறு பாடத் திட்டங்களை டிஜிட்டல் முறையில் கிடைக்க வழி செய்துள்ளதோடு, 15 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.