நொய் அரிசி, கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது தொடா்பாக உலக வா்த்தக அமைப்பின் மாநாட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
உள்நாட்டில் கோதுமை இருப்பைக் கருத்தில் கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மே மாதம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதேபோல, இந்த மாதம் நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மட்டுமன்றி, புழுங்கல் அரிசி தவிர பாசுமதி அரிசி அல்லாத இதர அரிசிகளுக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.
இந்தியாவிடமிருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல், அதிகளவில் நொய் அரிசியை இறக்குமதி செய்கிறது. இதுதவிர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் அரிசி தேவைக்கு இந்தியாவை சாா்ந்துள்ளன.
இந்த நிலையில், ஜெனீவாவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக வா்த்தக அமைப்பின் மாநாட்டின்போது, நொய் அரிசி, கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்தது தொடா்பாக அந்த நாடுகள் கேள்வி எழுப்பின.
இதற்கு மத்திய அரசு தரப்பில், ‘இந்தியாவில் நொய் அரிசி ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக அதிகரித்தது. இது உள்நாட்டு சந்தையில் சாதகமற்ற தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கோதுமையை பொருத்தமட்டில் உள்நாட்டில் தேவை அதிகரித்ததால், அதன் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. இவை அனைத்தும் தற்காலிகமான நடவடிக்கைதான். நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டது.