பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
பயங்கரவாத தாக்குதலைப் போல சித்தரிக்கவும், மிக பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை வாங்கிக் குவித்து, ஒரே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல முக்கிய இடங்களில் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கேரளத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர் ஷபீஃக் பயத் மீதான ரிமாண்ட் அறிக்கையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி பாட்னா வந்திருந்த போது பல இடங்களில் தாக்குதல்களை நடத்தவும் பயிற்சி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஓராண்டில் மட்டும் ரூ.120 கோடியை பிஎஃப்ஐ திரட்டியிருப்பதும். பெரும்பாலும் இந்தத் தொகை ரொக்கமாகவே திரட்டப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத் துறை கூறுகிறது.
வியாழக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பிஎஃப்ஐ-யின் முக்கிய உறுப்பினர்கள் நான்கு பேரை கைது செய்தது. தேசிய புலனாய்வு முகமை 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருந்தது.
நாடு முழுவதும் நடந்த சோதனை
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயங்களுக்கு ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் தேசிய தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.