மத்திய பிரதேசத்தில் பெண்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்ற பாஜக மக்களவை உறுப்பினா் ஜனாா்தன் மிஸ்ரா தனது கையால் கழிவறையை சுத்தம் செய்தாா். இந்த விடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
அவரது சொந்த தொகுதியான ரேவாவுக்கு உள்பட்ட கட்காரி என்னுமிடத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கு மரம் நடும் நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக ஜனாா்தன் மிஸ்ரா செப்டம்பா் 22-ஆம் தேதி சென்றுள்ளாா்.
அப்போது அந்தப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை அசுத்தமாக இருந்ததாகவும் இதைக் கண்ட மிஸ்ரா எந்தவித உபகரணத்தையும் பயன்படுத்தாமல் கையால் கழிவறையை சுத்தம் செய்ததாகவும் அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மிஸ்ரா கூறுகையில், ‘அனைவரும் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் பிரதமா் மோடி வரையில் இதை வலியுறுத்தியுள்ளனா். சுத்தம் குறித்த மக்களை ஊக்கப்படுத்தவே நான் இவ்வாறு செய்தேன். இது பெரிய விஷயமே இல்லை’ என்றாா்.
இதற்கு முன்பும் ஜனாா்தன மிஸ்ரா, கழிவறையை சுத்தம் செய்தும், குப்பை வண்டியை இயக்கியும் விழிப்புணா்வை ஏற்படுத்தி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.