ஹைதராபாத்தில் விபத்தில் சிக்கிய பெண் மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் மாலக்பேட் பகுதியில் மூன்று நாள்களுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பல் மருத்துவரான மருத்துவர் ஸ்ரவாணி செப்.21ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் மோதி கீழே விழுந்தார். மோதிவிட்டு கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் நிஜாமின் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை இளம் மருத்துவர் உயிரிழந்தார்.
ஸ்ரவாணி ஹஸ்தினாபுரத்தில் உள்ள பல் மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 25 நாள்களுக்கு முன்பு அவரது தாயார் மாரடைப்பால் இறந்த சோகம் மறைவதற்குள் அவரது குடும்பத்திற்கு இன்னொரு சோகம் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் அடையாளம் கண்டு, கார் ஓட்டிய இளைஞரை கைது செய்தனர். அவர் பழைய மலக்பேட்டையில் வசிக்கும் இப்ராகிம் (19) எனத் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.