கான்பூர்: கரோனா பேரிடர் காலத்தில் அதாவது 18 மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த 35 வயது நபரின் உடலுடன் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து கான்பூர் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
விசாரணைக் குழுவை அமைத்து காவல்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைக் குழுவினர், இரண்டு முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க உத்தரைவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தனை நாள்களாக உடல் அழுகாமல் இருக்க இந்தக் குடும்பத்தினர் எந்த முறையைக் கையாண்டனர். எந்தக் காரணத்துக்காக இவர்கள் இந்த உடலை பாதுகாத்து வந்துள்ளனர். இன்னும் எத்தனை காலத்துக்கு இவ்வாறு பாதுகாக்க திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்தும் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக உயிரிழந்தவரின் அலுவலகம், வங்கிக் கணக்கு மற்றும் இதர விஷயங்களையும் விசாரித்து வருகிறார்கள்.
ஒரு வேளை, இது தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த விசாரணைக் குழு பரிந்துரைத்தால் அடுத்து அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யார் மீதேனும் தவறு இருந்தால், நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஒரு உடலை அவமரியாதை செய்வதும் குற்றம்தான் என்று கூறினார்.