ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் நடந்த சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், ஒடிசா குற்றப்பிரிவின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) குழுவினர் சுந்தர்பாதா-ஜட்னி சாலையில் சோதனை நடத்தியதில், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து 1050 கிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக புவனேஸ்வரைச் சேர்ந்த உமேஷ் பெஹரா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான சிறப்பு இயக்கத்தை பணிக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2020 முதல், சிறப்பு அதிரடிப்படை 58 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள், 202 கிராம் கோகோயின் மற்றும் 111 குவின்டலுக்கும் அதிகமான கஞ்சா, 750 கிராம் ஓபியம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 159 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளது.