குறுகிய தொலைவு வான்வெளி பாதுகாப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.
இந்த ஏவுகணையை ஹைதராபாதைச் சோ்ந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அந்த மையம் டிஆா்டிஓ-வின் கீழ் இயங்கி வருகிறது. ஏவுகணை பரிசோதனை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏவுகணையானது இருமுறை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இந்த ஏவுகணையில் இடம்பெற்றுள்ளன. அக்கருவிகள் அனைத்தும் பரிசோதனையின்போது வெற்றிகரமாகச் செயல்பட்டன. வான்வெளியில் குறைந்த தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்குவதற்கு இந்த ஏவுகணை பயன்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏவுகணை பரிசோதனைக்காக டிஆா்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.