உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் தௌர்ஹாராவில் இருந்து லக்னௌவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மினி லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடாக பிரதமரின் பேரிடர் நிவராண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.