குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரத்தை பாஜக அரசு உயர்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத், பாவ்நகர், அகமதாபாத் மற்றும் அம்பாஜி ஆகிய இடங்களில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பிரதமர் மோடி , ‘சூரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80,000 வீடுகளைக் கட்டி ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் படி, 4 கோடி ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளது. அதில் 32 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். சூரத்தில் பயனடைந்தவர்கள் சுமார் 12.5 லட்சம் பேர். இந்தியா முழுவதிலும் உள்ளவர்கள் சூரத்தில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட இது ஒரு மினி இந்தியா’ எனக் கூறினார்.
மேலும், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பாவ்நகரில் அடிக்கல் நாட்டுவதுடன், 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். குஜராத்தில் முதன்முறையாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அம்பாஜி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக அகல ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், அம்பாஜி கோயிலுக்குச் சென்று, கப்பர் தீர்த்தத்தில் நடக்கும் மகா ஆரத்தியிலும் அவர் கலந்துகொள்கிறார்.
அகமதாபாத்தில் நடைபெறும் நவராத்திரி விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.