அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அணுசக்தித் துறையில் பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்களைக் கட்டமைப்பதற்கு நிதி ஆதாரங்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அடிமட்ட அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கில், அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
தற்போது வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்களை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது என்று தெரிவித்தாா்.
இந்தியாவில் தற்போது உள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறன் 6,780 மெகா வாட்டாக உள்ளது. இந்நிலையில், 2031-ஆம் ஆண்டுக்குள் மேலும் 21 அணுமின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றின் மூலம் கூடுதலாக 15,700 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.