புது தில்லி: 2022ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறைந்து சுற்றுலாத் தலமாக மாறியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு நிறைவுபெற்றதையடுத்து, ஆண்டறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் 54 சதவீதம் குறைந்துள்ளது. அதே வேளையில், 2022ஆம் ஆண்டில் மட்டும் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு - காஷ்மீர் வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் 417 பயங்கரவாத நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. இது 2021ஆம் ஆண்டு 229 ஆகக் குறைந்துள்ளது. அதுபோல, 2018ல் பயங்கரவாத சம்பவங்களில் 91 பேர் பலியான நிலையில், 2021ஆம் ஆண்டில் 42 பேர் பலியாகினர்.
இதன் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் 54 சதவீதம் குறைந்திருப்பதாகவும், பாதுகாப்புப் படையில் நேரிட்ட உயிரிழப்புகள் 84 சதவீதம் குறைந்திருப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு ஆள்சேர்ப்பு 22 சதவீதம் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், ஜம்மு - காஷ்மீருக்கு ஆண்டுதோறும் சராசரியாக 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். ஆனால் இது 22 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் மக்களக்கு வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.