பஞ்சாப் அமைச்சரவையிலிருந்து தோட்டக்கலைத்துறை அமைச்சர் ஃபௌஜா சிங் சராரி சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
பஞ்சாபில் முதல்முறையாக கடந்த மார்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் தோட்டக்கலைத்துறை அமைச்சராக ஃபௌஜா சிங் சராரி(வயது 62) பதவியேற்றார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் பகவந்த் மானுக்கு ஃபெளஜா சிங் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். இவரது கடிதத்தை முதல்வர் பகவந்த் மான் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒப்பந்ததாரர்களை மிரட்டி அமைச்சர் ஃபெளஜா சிங் பணம் கேட்கும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இந்த ராஜிநாமா நடைபெற்றுள்ளது.
மேலும், பஞ்சாப் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.