உணவே விஷமாக மாறிய சம்பவம் கேரளத்தில் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த முறை, காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்ட பிரியாணி, அவரது உயிரையே பறித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி உள்ளூர் உணவகம் ஒன்றில் குழிமந்தி என்ற பிரியாணியை ஆர்டர் செய்த அஞ்சு ஸ்ரீபார்வதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை காலை சிகிச்சைபலனின்றி பலியானார்.
இதையும் படிக்க.. கோழிக்கறியை சமைப்பதற்கு முன் அலசவே கூடாதா? ஏன்?
இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் கூறாய்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், முடிவு வெளியானதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் கேரளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஞ்சு, பிறகு கர்நாடகத்தின் மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினர் இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையும் படிக்க.. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கேரளத்தில் ஒரே வாரத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோழிக்கோடுவில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிட்ட செவிலியர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்தார். அதே உணவகத்தில் சாப்பிட்ட 21 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.