ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைப் பயணத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜலந்தர் சாந்தோக் சிங் செளத்ரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடங்கிய நடைப்பயணம் பல்வேறு மாநிலங்களைக் கடந்து தற்போது பஞ்சாபில் நடைபெற்று வருகிறது.
பஞ்சாபின் பில்லோர் பகுதியிலிருந்து இன்று காலை நடைப்பயணம் தொடங்கியது. இதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜலந்தர் சாந்தோக் சிங் செளத்ரியும் நடந்தார்.
சிறுது தூரம் சென்றதும் செளத்ரி சோர்வாக உணர்ந்துள்ளார். திடீரென மயங்கி விழுந்த அவரை அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு காங்கிரஸ் கட்சியினர் அனுப்பி வைத்தனர்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. செளத்ரி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு ராகுல் காந்தி விரைந்துள்ளார்.