மும்பை: வியாழக்கிழமை மும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவிருக்கும் நிலையில், அங்குள்ள பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு பணித்துள்ளது.
மும்பை மாநகர் முழுக்க சுமார் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கும் மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைகளிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக மும்பை மாநகரமே தயாராகிக் கொண்டிருக்கிறது.
பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள எம்எம்ஆர்டிஏ அரங்கில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. மும்பையில் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது, மும்பையில் ரூ.38,800 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற திட்டங்களை தொடக்கி வைத்தும், தொடங்கவிருக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார்.