ஹசாரிபாக் (ஜார்கண்ட்): பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமணமான 23 வயது பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டவர், ராஞ்சி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கை சேர்ந்த திருமணமான 23 வயது பெண் கடந்த 7 ஆம் தேதி இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் உள்பட நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் அந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹசாரிபாக் போலீசார், இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எஸ்பி தெரிவித்தார். "எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவிர, "உதவிக்காக கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் தான் காப்பாற்றப்பட்டதாக அந்த பெண் மருத்துவமனையில் போலீசாரிடம் கூறியுள்ளார், அதே நேரத்தில் மனைவியை தான் தான் காப்பாற்றியதாக கணவர் கூறியுள்ளார், இதில் முரண்பாடுகள் உள்ளதால் உயிரிழந்த பெண்ணின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று ஹசாரிபாக் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே கூறினார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், உயிரிழந்த பெண் அவருக்கு நான்காவது மனைவி என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேரில் ஒருவர் பெண் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மைத்துனர் என்பதால், அந்தப் பெண்ணின் பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டு குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது, அண்ணியின் மகன்களும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் துணை-பிரிவு போலீஸ் அதிகாரி அனுஜ் ஓரான் கூறுகையில், “பாதிக்கப்பட்டவரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களின் முதல்கட்ட விசாரணையுடன் பொருந்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தடவியல் அறிவியல் ஆய்வகம் முடிவுக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.