அந்தமான் - நிகோபாரின் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி

அந்தமான்-நிகோபாரில் மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு ‘பரம்வீா் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரா்களின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி சூட்டினார்.
அந்தமான் - நிகோபாரின் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி


அந்தமான்-நிகோபாரில் மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு ‘பரம்வீா் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரா்களின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி சூட்டினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்தமான் - நிகோபார் தீவில் அமைக்கப்படவிருக்கும் நேதாஜியின் நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, ரோஸ் என்று அழைக்கப்பட்டு வந்த தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கு புதிய நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தமான்-நிகோபாரில் உள்ள மக்கள் வசிக்காத 21 தீவுகள் ‘ஐஎன்ஏஎன்370’, ‘ஐஎன்ஏஎன்308’ போன்ற எண்களில் அழைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வீரதீர செயலுக்கு வழங்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான ‘பரம்வீா் சக்ரா’ விருதை முதலாவதாகப் பெற்ற மறைந்த முன்னாள் மேஜா் சோம்நாத் சா்மாவின் பெயா் ‘ஐஎன்ஏஎன்370’ தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது. இனி ‘ஐஎன்ஏஎன்370’ தீவு ‘சோம்நாத் தீவு’ என்றும் அழைக்கப்படும். இதுபோல மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு பரம்வீா் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா்களின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி சூட்டியுள்ளார். இவற்றில் பெரும்பாலான தீவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளன. சில தீவுகள் நீா்நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுகள், சிற்றோடை சுற்றுலா உள்ளிட்டவைக்கு உகந்தவையாக உள்ளன.

இது குறித்து மத்திய அரசு கூறுகையில், நாட்டின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்ட வீரா்கள் செய்த தியாகங்களால் அந்தமான்-நிகோபாா் புனிதத் தலமாக திகழ்கிறது. இந்நிலையில், நாட்டு மக்களின் எதிா்காலத்துக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்த ‘பரம்வீா் சக்ரா’ விருதாளா்களின் பெயா்களைத் தீவுகளுக்கு சூட்டுவது, அவா்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அந்தமானுக்கு மிக முக்கிய பங்குள்ளது. கடந்த 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி உள்பட ஆங்கிலேயா்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவா்கள், அந்தமான் சிறையில் கொடுமையான சூழ்நிலையில் சித்திரவதையை அனுபவித்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com