புது தில்லி: பெரும் பிளவு, மதப் பிரிவினைவாதம், அவரது புதிய இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது.
"இதியா: மோடி மீதான கேள்வி" என்ற இரண்டாவது மற்றும் இறுதி பிபிசி ஆவணப்படம் நேற்று இரவு ஒளிபரப்பாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே குஜராத் கலவர ஆவணப்படம் உருவாக்கம்
2014-ஐக் காட்டிலும், அதிகமான பெரும்பான்மையுடன் 2019 -இல் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலான "சிக்கலான உறவை" ஆய்வு செய்திருப்பதாக இந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒளிபரப்பான இந்த ஆவணப்படத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு, சிஏஎ, வடகிழக்கு தில்லியில் 2020ஆம் ஆண்டு நேரிட்ட மதக்கலவரம் பற்றியும் பேசியிருக்கிறது.
மிகச் சுதந்திரமாக தயாரிக்கப்பட்ட பிபிசி ஆவணப்படத்தின் இறுதி பாகமானது, பல்வேறு தரப்பினர், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துகள், கல்வியாளர்கள், பத்திரிகை துறையினர், பொதுமக்கள், அரசு மற்றும் காவல்துறை தரப்பு என பல தரப்பினரின் கருத்துகளும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, பாஜகவின் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்வதற்காக, அவர்களது மூன்று பிரதிநிதிகளும் இதில் இடம்பிடித்துள்ளனர். அவர்களில் பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தாவும் ஒருவர்.
2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.
"மோடி கேள்வி" பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகத்தின் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை இணைத்துள்ளார்.
''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், யூடியூப் விடியோ மற்றும் அதன் இணைப்புகளைக் கொண்ட டிவிட்டர் பகுதிகளை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா: மோடி மீதான கேள்வி இரண்டாம் பாகத்தின் விடியோ, " இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30க்கும் மேற்பட்டோர், இந்த ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
காரணம், அவர்களது பாதுகாப்புக் கருதி.
இதில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கூறவும் இந்திய அரசு மறுத்துவிட்டது என்ற பதிவுடன் தொடங்குகிறது.
குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதன் முதல் பாகம் அண்மையில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஆவணப்படத்தில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில்தான், தற்போது இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடியோ யூடியூப்பில் வெளியாகாமல் புதிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.