எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா எல்-சிசிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தில்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க அதிபா் எல்-சிசி நேற்று தில்லி வந்தடைந்தார். மூன்று நாள்கள் அரசுமுறை பயணமாக மேற்கொண்டுள்ள ஃபத்தா எல்-சிசியுடன் 5 அமைச்சா்களும், மூத்த அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனா்.
இந்நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த ஃபத்தா எல்-சிசிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடியுடன் ஃபத்தா எல்-சிசிக்கு பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.
இச்சந்திப்பின்போது, வேளாண்மை, எண்மம் (டிஜிட்டல்), வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிபா் எல்-சிசியை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.
வியாழக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபா் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறாா். குடியரசு தின விழாவில் எகிப்து அதிபா் தலைமை விருந்தினராக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவப் படை பிரிவினரும் பங்கேற்கின்றனா்.
அரபு-ஆப்பிரிக்க நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நட்புறவை மேம்படுத்த இந்தியாஆா்வம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகமும் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் 712 கோடி டாலராக (சுமாா் ரூ. 58,122 கோடி) இருந்தது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.