கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
 உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
 மூத்த வழக்குரைஞர்கள் செளரவ் கிர்பால், ஜான் சத்யன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், உளவுத் தகவல்களின் அடிப்படையில் அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்திருந்தது.
 இந்நிலையில், செளரவ் கிர்பால், ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கொலீஜியம் கடந்த 19-ஆம் தேதி மீண்டும் பரிந்துரைத்தது. அப்போது, மத்திய அரசு வழங்கியிருந்த உளவுத் தகவல்களையும் கொலீஜியம் தனது அறிக்கையில் வெளியிட்டது.
 இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "உளவு அமைப்புகளான ரா, ஐபி உள்ளிட்டவை வழங்கும் ரகசியத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் ரகசியமாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களது உளவுத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டால், எதிர்காலத்தில் தகவல்களை வழங்குவதற்கு அவர்கள் தயங்குவார்கள்.
 இந்த விவகாரத்தில் உரிய ரேத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடிடம் வலியுறுத்தப்படும். அவர் நீதித் துறையின் தலைவராக உள்ளார். அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையேயான பாலமாக மத்திய சட்டத் துறை அமைச்சர் செயல்பட வேண்டும். இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதே சிறந்தது.
 நீதிபதிகள் நியமன விவகாரம் நிர்வாகம் சார்ந்தது. அதற்கும் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. நீதிபதிகள் நியமனம் குறித்து கருத்து தெரிவிப்பது நீதித் துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து எவரும் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்றார்.
 கொலீஜியம் எடுக்கும் முடிவுகளைப் பொதுவெளியில் வெளியிடும்போது அதில் உளவுத் தகவல்கள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும்.
 மோதல்போக்கு: நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்த நிலையில், அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி அந்த அமைப்பை 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
 தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அண்மையில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. கொலீஜியம் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரிஜிஜு கருத்து: கபில் சிபல் விமர்சனம்
 புது தில்லி, ஜன. 24: நீதித் துறையை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை என்ற மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்தை மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
 தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
 அதைக் கொண்டு இருதரப்பினரும் மோதிக் கொள்வதாகவும், மகாபாரதப் போரில் ஈடுபடுவதாகவும் கருதக் கூடாது. நீதித் துறையை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் ஈடுபடுவதில்லை' என்றார்.
 அவரது கருத்தை விமர்சித்து மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "ரிஜிஜுவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் நீதித் துறையை வலுப்படுத்துகின்றனவா? ரிஜிஜு வேண்டுமானால் அவ்வாறு நம்பலாம். ஆனால், வழக்குரைஞர்கள் அதை நம்பமாட்டார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com