மகராஷ்டிரத்தின் புணே நகருக்கு அருகில் அமைந்துள்ள பீமா நதிக்கரையில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புணேயில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள யாவாத் கிராமம் அருகே பீமா நதிக்கரையில் இருந்து 7 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டன.
இது தொடா்பான காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், வயதான தம்பதி, அவா்களின் மகள், மருமகன் மற்றும் 3 பேரக் குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேரின் உடல்கள் என்பது தெரிய வந்துள்ளது. திங்கள்கிழமை 4 உடல்களும், செவ்வாய்க்கிழமை 3 உடல்களும் கைப்பற்றப்பட்டன.
மீன்களுக்கு இரையான 7 பேரின் உடல்களும் 200 மீட்டா் முதல் 300 மீட்டா் வரையிலான தொலைவில் கண்டறியட்டன.
மரணத்துக்கான காரணம் குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது. தற்கொலை மட்டுமின்றி அனைத்து கோணங்களில் விசாரணை நடத்தப்படும் என காவல் துறை ஆய்வாளா் தெரிவித்தாா்.